articles

img

முதல் குடிமகளுக்கே இதுதான் கதியென்றால் ப.முருகன்

    ஆலயம் தொழுவது சாலவும் நன்று. இது ஒளவையார் வாக்கு. ஆனால் தொழுவதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கிறதா? வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.  

    கோவிலுக்குள் நுழைவதற்கே அனுமதியில்லை என்கிற போது வழிபடுவது, தொழுவது எப்படி? உள்ளே நுழைந்து வழிபடும் உரிமை சாதாரண பொதுமக்கள் முதல் ஜனாதிபதி எனும் முதல் குடிமகள், மகன் வரை எல்லோருக்கும் இந்த அநீதி இழைக்கப்படுகிறது.

     அண்மையில் கரூர் மாவட்டம் வீரணம்பட்டியில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழக அரசு தலையிட்டு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் முயற்சியில் அமைதிக் கூட்டம் நடத்தி தீர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆட்சியர் தலைமையிலேயே பட்டியலின மக்கள் வழிபடவும் செய்தனர். ஆனால் விழுப்புரம் மாவட்டம் மேல் பாதியில் இன்னும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை. இது போல் பல ஊர்களிலும் வழிபாட்டு உரிமை மறுப்பு நடந்துகொண்டேயிருக்கிறது.

   அண்மையில் சிதம்பரம் நடராசர் கோவிலில் கனகசபை எனும் பொன்னம்பலத்தில் ஏறி நின்று பக்தர்கள் வழிபடக்கூடாதென தீட்சிதர்கள் பதாகை வைக்க, அது அறநிலையத்துறையால் அதற்றப்பட்டது. அதற்கு தீட்சிதர்களும் பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து மல்லுக்கு நின்றனர். ஆயினும் காவல்துறை, உதவியுடன் பக்தர்களின் வழிபாடு கனகசபை மீதேறி வெற்றிகரமாக நடந்தது. அப்போதும் தீட்சிதர்களும் பாஜக வினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிகழ்வுகள் கோவில்கள் அரசின் அறநிலையத்துறையின் வசமே இருக்க வேண்டும் என்பதை தனியாரிடம் தரக்கூடாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

   இது ஒருபுறம் இருக்க, நாட்டின் முதல் குடிமகள், ஜனாதிபதி முர்மு அவர்களை ஜெகநாதர் கோவிலில் கருவறைக்கு வெளியில் இருந்தே வழிபடச் செய்திருக்கிறார்கள் அந்த கோவிலின் அர்ச்சகர்கள். இது குறித்து அவர் தனது மனவருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார். அது சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாக கண்டிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஒரு பலனும் இல்லை.

    ஆனால் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருவறைக்குள் நுழைந்து சிலை களை தொட்டுக்கும்பிட்டிருக்கிறார். இது எப்படி? எனும் கேள்வி எழுந்தபோது, அந்த கோவிலின் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகத்தின் அழைப்பின்பேரில் வருபவர்களுக்கு மட்டுமே இத்தகைய உரிமை தரப்படுகிறது என்று கூறியுள்ளனர்.  

    சரி. அவர்கள துவாதப்படியே வைத்துக்கொண்டாலும், ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாதா? முடியாதாம். ஏனென்றால் அவர் பழங்குடிஇனத்தைச் சேர்ந்தவர் என்பது தான். இது தான் அவர்களது வருணாசிரம தர்மம். அதாவது சனாதன தர்மம். இதைத்தான் மநுதர்மம் என்கிறார்கள். இந்த சனாதன தர்மம் பற்றித்தான் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி விடாமல் பேசிக்கொண்டிருக்கிறார். இது இன்றைய ஜனாதிபதி முர்மு அவர்களுக்கு மட்டுமல்ல, முந்தைய ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அவர்களுக்கும் பூரி ஜகந்நாதர் கோவிலில் நேர்ந்திருக்கிறது.

   இந்த அநீதியை எதிர்த்து அவர், தந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் தொடர்புடையவர்கள் மீது எடுக்கப்படவில்லை என்பது மிகவும் கொடுமையானது.  பட்டியல் இனத்தவரோ, பழங்குடி இனத்தவரோ, பாஜகவில் இருந்தாலும் நாட்டின் எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே, அவர்ணர்களாகவே நடத்தப்படுவார்கள் என்பதே இந்துத்துவாவின் நடப்புக் கதை. இதுதான் மநுவின் அதர்மம். இவர்கள் போற்றிப் புகழும் புராண, இதிகாசங்களும் அதைத்தான் கூறும். அதையும் கடவுளின் வாயாலேயே சொல்ல வைப்பார்கள். கீதையில் கிருஷ்ணன் கூறுவது அதுதான்.

    வர்ணங்களை நானே நினைத்தாலும் மாற்றமுடியாது என்பான். இந்த சனாதன தர்மம், சமதர்மத்துக்கு எதிரானது. சிதம்பரம் கோவிலில் நந்தன் நுழைந்த வாயிலை இன்னும் அடைத்து வைத்திருப்பதும் அந்த சனாதன தர்மம்தான். பாட்டுப் பாடியேகோவிலின் பூட்டைத் திறந்து மக்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தவர் திருநாவுக்கரசர் என்று கூறுவார்கள். ஆனால் இன்று அறநிலையத்துறைதான், தமிழ்நாட்டுஅரசுதான் ஆணையிட்டு திறக்க வைத்து வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும்.

    வழிபடுவதற்கு மட்டுமின்றி, ஆகமப்பயிற்சி பெற்ற அனைவரும் கருவறையில் இருந்துஅர்ச்சகப் பணி செய்வதற்கும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அண்மையில் அளிக்கப்பட்ட உயர்நீதிமன்ற த்தீர்ப்பு உதவி கரமாக இருக்கும். அதைப் பயன்படுத்தி அரசே, ஆலயமணிக்கதவை தாழ் திறப்பாய். அனைவரது வழிபாட்டு உரிமையையும் பாதுகாப்பாய். சனாதனத்துக்கு சம்மட்டி அடி கொடுப்பாய்!